நான் கடந்த பல வருடங்களாக நீதிமொழிகள் புத்தகத்தில் தினமும் ஒவ்வொரு அதிகாரம் வாசித்து வருகிறேன். ஆனாலும் அதனைப் பற்றி ஆழமாக தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்தது. அதன் விளைவாக நாளுக்கு ஒரு வசனத்தை வாசித்து தியானித்தேன்.
வேத ஆராய்ச்சி வேதாகமம் மற்றும் நீதிமொழிகள் பற்றிய குறிப்புகள் வழியாக நான் கற்று கொண்டதையும், கர்த்தர் எனக்கு உணர்த்தின காரியங்களையும் குறிப்புகளாக எழுதி வைத்ததையும் இங்கே பதிவிட்டிருக்கிறேன். இதை வாசிக்கும் ஒவ்வொருவருடைய ஆவிக்குரிய வாழ்விற்கும் பிரயோஜனமாக இருக்கும் என்று நம்புகிறேன்.
நீதிமொழிகள் முதலாம் அதிகாரம் இந்த புத்தகத்தின் நோக்கம் பற்றிய தெளிவான விளக்கத்தை அளிக்கிறது. இந்த புத்தகத்தை எழுதியவர் பற்றியும், சாலொமோனின் பரம்பரைப் பற்றியும், அவர் யாருக்கு எழுதுகிறார் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது. பாவத்திற்கு எதிரான எச்சரிக்கைகள் நிறைந்துள்ள புத்தகம் இது. தன் மகன் புத்திசாலித்தனமாக விவேகத்தோடும், ஞானத்தோடும் செயல்படவேண்டும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
நீதிமொழிகள் :1:1
தாவீதின் குமாரனும் இஸ்ரவேலின் ராஜாவுமாகிய சாலொமோனின் நீதிமொழிகள்:
நீதிமொழிகள் யாரால் எழுதப்பட்டது என்பதை இவ்வசனம் கூறுகிறது. இஸ்ரவேலின் ராஜாவாகிய தாவீதிற்கும் பத்சேபாளுக்கும் பிறந்த இரண்டாவது குமாரனாகிய சாலொமோன் எழுதிய நீதிமொழிகள். தாவீது மற்றும் சாலொமோன் இருவரும் தனித்தனியே 40 வருடங்கள் இஸ்ரவேலை ஆண்டனர்.
சாலொமோன் இஸ்ரவேலின் ராஜாவானபோது, கர்த்தரிடம் இருந்து ஞானத்தையும், அறிவையும் கேட்டுப் பெற்றுக்கொண்டார். அது அவருக்குச் செல்வத்தையும், மரியாதையையும், புகழையும் தேடித்தந்தது.
ஞானத்தில் சிறந்து விளங்கின சாலொமோன் தன் வாழ்வில் அதைப் பயன்படுத்த தவறினார். அவரது மகன் ரெகோபெயாமும் எல்லா புத்திமதிகளைப் பெற்றுக் கொண்டாலும், அதை ஞானத்தோடு பயன்படுத்த தவறினான். தன் தந்தையின் போதனைகளை நிராகரித்தார்.
No comments:
Post a Comment