Tuesday, January 5, 2021

உன் நம்பிக்கை வீண்போகாது

 

நீதிமொழிகள் :23 :17 ,18
உன் மனதைப் பாவிகள்மேல் பொறாமைகொள்ள விடாதே; நீ நாடோறும் கர்த்தரைப் பற்றும் பயத்தோடிரு.
நிச்சயமாகவே முடிவு உண்டு; உன் நம்பிக்கை வீண்போகாது.

    இவ்வுலகில் பாவிகளும், தேவபக்தியற்றவர்களும் கூட எல்லா ஆசீர்வாதங்களையும், நன்மைகளையும் பெற்று செழிப்பாய் வாழ்ந்து வருகிறதைக் காண்கிறோம். இதைப் பார்க்கும் பொது கர்த்தருக்கு வாழ்கிறவர்கள் சோர்வடைந்து போகலாம்.  துன்மார்க்கர் செழிப்புடன் வாழ்வதைப் பார்த்து பொறாமை கொள்ளாதே என்று 17 - ம் வசனம் கூறுகிறது.  நாம் அவர்களை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்ற வேண்டும். பணம் படைத்தவர்கள் மற்றும் பிரபலங்களின் வாழ்க்கை முறைகள் நம்மை பொறாமைப்படவைக்கலாம்.

    ஆனால் கர்த்தர் நம்மை இந்த வசனத்தின் மூலம் எச்சரிக்கை செய்கிறார். அப்படிப்பட்டவர்களின் வாழ்க்கையைப் பார்த்த நாம் அவர்களை போல வாழ வேண்டும் என்று நம் இருதயத்தை அவர்கள் பக்கம் சாய்க்க வேண்டாம்.  மேலும்  நாம் அவர்களை போல வாழ முடியவில்லையே என்றும் துன்மார்க்கர் வாழ்ந்து சுகித்திருக்கிறார்களே என்றும் அவர்கள் மேல் பொறாமை கொள்ள வேண்டாம். 

    கர்த்தருடைய பிள்ளைகள் செய்ய வேண்டிய ஒரே காரியம், நாம் கர்த்தரைப் பற்றும் பயத்தோடு இருப்பதுதான்.  அப்படியானால் பொல்லாதவர்களின் நிலை என்ன? அவர்கள் கர்த்தரின் நியாத்தீர்ப்பிலிருந்து தப்பிக்க முடியாது. ஐசுவரியவான், லாசருவை நினைத்து கொள்ளுங்கள். மரணத்திற்குப் பின் ஐசுவரியாவான் நரகத்தின் வேதனையை அனுபவித்தான்.  லாசருவோ ஆபிரகாமின் மடியிலே தேற்றப்பட்டான்(லூக்கா:16:19-31).

    கர்த்தருக்கு பயந்து வாழ்கிறவர்களுக்கு ஒரு அருமையான வாக்குறுதி கொடுக்கப்படுகிறது.  நம் நம்பிக்கை வீண் போகாது.  நிச்சயமாக ஒரு எதிர்காலம் இருக்கிறது.  காணப்படாத நித்தியத்திற்கு நாம் ஆயத்தமாவோம்(2 கொரிந்தியர்:4:16-18).  பரலோக மகிமை எல்லா துன்பங்களுக்கும் முடிவைக் கொண்டு வரும்.

    பாவிகளுக்கு நீண்ட கால நம்பிக்கை இல்லை. அவர்களுக்கு எதிர்காலம் இல்லை.  துன்மார்க்கரின் வாழ்வு உங்களை கவர்ந்திழுக்க முயற்சி செய்தால் அதில் விழுந்து போக வேண்டாம்.  துன்மார்க்கருடைய முடிவு நரகம்.  கர்த்தருக்கு பயந்தவர்கள் முடிவு பரலோகம்.  அதைத் தவற விட்டு விடாதீர்கள்.  இவ்வுலகில் நாம் சிறுமைப்பட்டு நெருக்கப்பட்டால் கர்த்தர் அடைக்கலமாகவும் தஞ்சமாகவும் இருப்பார். 

நீதிமொழிகள் :24 :14
அப்படியே ஞானத்தை அறிந்துகொள்வது உன் ஆத்துமாவுக்கு இன்பமாயிருக்கும்; அதைப் பெற்றுக்கொண்டால், அது முடிவில் உதவும், உன் நம்பிக்கை வீண்போகாது.

சங்கீதம் : 9 :18
எளியவன் என்றைக்கும் மறக்கப்படுவதில்லை; சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப்போவதில்லை.

ஜெபம்:

அன்புள்ள இறைவா, உன் நம்பிக்கை வீண் போகாது என்று நீர் தந்த வாக்குத்தத்தத்திற்காக உமக்கு ஸ்தோத்திரம். இவ்வுலகத்தார் எப்படி வாழ்ந்தாலும் நாங்கள் உம்மைப் பற்றும் பயத்தோடிருக்க உதவி செய்யும். பாவிகள், துன்மார்க்கர் மேல் பொறாமை கொள்ளாமல் உம் சத்தத்திற்கு செவி கொடுத்து வாழ உதவி செய்யும்.  இவ்வுலகில் நெருக்கங்கள், சோதனைகள் வந்து சிறுமைப்பட்டாலும் பரலோகில் மகிமையான வாழ்வு எங்களுக்காக காத்திருக்கின்றதை எண்ணி துதிக்கிறோம். பரலோக வாழ்வினைப் பெற்றுக்கொள்ள எங்களைத் தகுதிப்படுத்தும்.  ஆமென்.


No comments:

Post a Comment