புலம்பல் : 3 : 22 - 24
நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை.
அவைகள் காலைதோறும் புதியவைகள்; உமது உண்மை பெரிதாயிருக்கிறது.
கர்த்தர் என் பங்கு என்று என் ஆத்துமா சொல்லும்; ஆகையால் அவரிடத்தில் நம்பிக்கைகொண்டிருப்பேன்.
புலம்பல் 1 , 2 ம் அதிகாரங்களில் எருசலேம் படும் பாடு சொல்லப்பட்டுள்ளது. ஆனால் 3 - ம் அதிகாரத்தில் தனி ஒரு மனிதனின் கூக்குரல் சொல்லப்பட்டுள்ளது. இது எரேமியாவின் புலம்பலாக இருந்தாலும், துன்பத்தை சகித்துக் கொண்டிருந்த அநேகரின் புலம்பலாகக் காணலாம்.
தவறு செய்பவர்களை நெறிப்படுத்தும் இந்த சிறுமை ஆண்டவருடைய சினத்தின் மிலாறாக சொல்லப்பட்டுள்ளது. தவறு செய்பவர்களை நெறிப்படுத்தும் மிலாறு. நம்பிக்கை அற்ற வாழ்க்கையை எருசலேம் மக்கள் வாழ்ந்த சூழலில் எரேமியா நம்பிக்கையை ஊட்டுகிறார்.
கர்த்தர் தம் ஜனத்தின் மேல் அன்பாயிருக்கிறார். எனவே அவர் அவர்களை நிர்மூலமாக்காமல் கிருபையாய் இரங்குவார். ஏனெனில் அவர் இரக்கமுள்ள தேவன். ஒவ்வொரு நாள் காலையும் புதிய கிருபைகளினாலும் இறக்கங்களினாலும் முடிசூட்டுவார். அவர் உண்மையுள்ள தேவன்.
முந்தைய நாள் எவ்வளவு மோசமானதாக இருந்தாலும், வாழ்க்கையில் நம்பிக்கையே இல்லை என்ற சூழல் வந்தாலும், ஒவ்வொரு நாள் காலையையும் புதிய விசுவாசத்தோடும், நம்பிக்கையோடும் எதிர் கொள்ளுங்கள். வாக்கு மாறாத கர்த்தர், உண்மையுள்ள தேவன் நம்மோடிருந்து நம்மை வழிநடத்துவார்.
· கர்த்தர் கிருபை உள்ளவர்.
· கர்த்தர் இரக்கம் உள்ளவர்.
· கர்த்தர் உண்மை உள்ளவர்.
உலக பிரகாரமான காரியங்களில், பொருட்களில் நம் பங்கை தெரிந்து கொள்கிறோம். அதே போல, கர்த்தரை நம் பங்காகக் கொள்வோம். நம்பிக்கையோடு வாழ்வோம்.
நெகேமியா :9 :31
ஆகிலும் உம்முடைய மிகுந்த இரக்கங்களின்படியே, அவர்களை நிர்மூலமாக்காமலும் அவர்களைக் கைவிடாமலும் இருந்தீர்; நீர் கிருபையும் இரக்கமுமுள்ள தேவன்.
மல்கியா:3 : 6
நான் கர்த்தர் நான் மாறாதவர்; ஆகையால் யாக்கோபின் புத்திரராகிய நீங்கள் நிர்மூலமாகவில்லை.
ஜெபம்:
அன்புள்ள கர்த்தாவே, எங்கள் பாவங்கள் அக்கிரமங்களினால் நாங்கள் சிறுமையடைந்து நம்பிக்கையிழந்து காணப்படுகிறோம். ஆனாலும் நீர் எங்கள் மேல் மனதுருக்கமுள்ள ஆண்டவராய் இருப்பதற்காக ஸ்தோத்திரம். நாங்கள் நிர்மூலமாகாமல் உம் கிருபையினால் நிலைத்து நிற்கிறோம். அதற்காக நன்றி. உம்மிடத்திலிருந்து நாங்கள் கிருபையையும், இரக்கத்தையும், அன்பையும் பெற்றுக்கொள்வதற்கு எங்களை தகுதிப்படுத்தும். உம்மை எங்கள் பங்காக்கிக் கொள்ள அருள் புரியும். இயேசுவின் நாமத்தில் ஆமென்.
No comments:
Post a Comment