ஏசாயா 60 :1 , 2
எழும்பிப் பிரகாசி; உன் ஒளிவந்தது, கர்த்தருடைய மகிமை உன்மேல் உதித்தது.
இதோ, இருள் பூமியையும், காரிருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காணப்படும்.
"எழும்பி பிரகாசி உன் ஒளி வந்தது" என்று ஏசாயா தீர்க்கதரிசி கூறுவதன் மூலம் இஸ்ரவேல் மக்களுக்கு நம்பிக்கையையும், உற்சாகத்தையும் அளிக்கிறார். சீர்கெட்டு அழிந்துக் கிடந்த தேசம் சீரமைக்கப்பட்டு மறுபடியும் நிலை நிறுத்தப்படும் என்ற செய்தியைக் கூறுகிறார். கர்த்தரின் ஆட்சி எல்லாவற்றிலும் மேலோங்கியிருக்கும் காலத்தை நம் கண் முன் காட்டுகிறது.
பல வீடுகளில் காலையில் எழும்பி உன் வேலையை செய் ; காலையில் எழும்பி படி; என்ற வார்த்தைகள் தினமும் தொனித்துக் கொண்டிருக்கும். காலையில் உற்சாகமூட்டும் வார்த்தைகளாக இவை காணப்படுகிறது. விசுவாசிகளும் எழுந்து பிரகாசிக்க அழைக்கப்படுகிறார்கள். கர்த்தர் இருந்து கிடக்கும் நம் வாழ்க்கையை பிரகாசிக்கச் செய்ய முடியும். அத்தகைய தேவன் நம்மோடு இருப்பதால் இருளில் ஜனங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வர நம்மால் முடிந்த காரியங்களை செய்ய வேண்டும். பாவிகளையும் பிரகாசிக்கச் செய்ய தேவனால் முடியும்.
நாம் எப்படி பிரகாசிக்க முடியும்? பாவத்தின் இருளில் வாழ்ந்த நாம் ஆவிக்குரிய மீட்சியை மிஷனெரிகள் வாயிலாக அடைந்திருக்கிறோம். மகிழ்ச்சியான நம்பிக்கையான வாழ்வை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். கர்த்தருடைய மகிமையான வருகையை பேரானந்தத்தோடு ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
எழும்பி பிரகாசி என்பது கர்த்தர் நமக்குக் கொடுக்கும் ஒரு கட்டளை. சுவிசேஷத்தை நாம் ஏற்றுக்கொள்ளும் போது நாம் உயிர்பிக்கப்படுகிறோம்.
நாம் ஏன் எழும்பி பிரகாசிக்க வேண்டும்? மத்தேயு :5 :14 -16 விளக்குத் தண்டின் மேல் வைக்கப்பட்ட விளக்கு வீட்டில் உள்ள அனைவருக்கும் வெளிச்சத்தைக் கொடுக்கும். அதே போல் நாம் கிறிஸ்துவை நம் வாழ்வின் அடித்தளமாகக் கொண்டு வாழும் போது நாமும் பிரகாசிக்க முடியும். நம் நற்செயல்களை பிறர் காணும் போதும், பிற மதத்தினர் காணும் போதும் பரலோகத்தின் பிதாவும் மகிமைப்படுவார். அதன் மூலம் அவிசுவாசிகளும் கர்த்தரண்டை கிட்டிச் சேர்வதற்கு ஒரு வாய்ப்பாக அமையும்.
ஒளியாகிய கிறிஸ்து நம் மூலமாக செயல்படுவதால் நம் வாழ்வு பிரகாசிக்கிறது. உலகத்தரிலிருந்து பிரிக்கப்பட்டதான வாழ்வு வாழ்கிறோம். கர்த்தருக்குப் பிரியமான, அவருக்கு கீழ்ப்படிந்து வாழ்வதன் மூலம் நாம் எழும்பிப் பிரகாசிக்க கர்த்தர் உதவுகிறார். கர்த்தருக்குள் மேலும் மேலும் வேரூன்றுவோம். இன்னும் மென்மேலும் கர்த்தர் நம்மைப் பிரகாசிப்பிப்பார்.
யோவான் :12 :46
என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவனெவனும் இருளில் இராதபடிக்கு, நான் உலகத்தில் ஒளியாக வந்தேன்.
கொலோசெயர்:1 :13
இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.
ஜெபம்:
அன்புள்ள பிதாவே, நீர் எங்களைப் பிரகாசிப்பிக்கிற தேவனாய் இருப்பதற்காய் நன்றி. இருளில் கிடந்த எங்களைத் தூக்கியெடுத்து வெளிச்சத்தின் பிள்ளைகளாய் மாற்றியதற்காய் நன்றி. நாங்கள் மட்டுமல்ல, எங்கள் நற்கிரியைகளைப் பார்த்து பிறரும் உம்மைத் தங்கள் வாழ்வில் ஏற்றுக்கொள்ள அவர்கள் வாழ்வும் பிரகாசிக்கத்தக்க கிருபை புரியும். எல்லா சூழ்நிலைகளிலும் நாங்கள் உமக்காக எழும்பிப் பிரகாசிக்க உதவி செய்யும்.
No comments:
Post a Comment