ரோமர்:12 :2
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமான சித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
இந்த உலகத்தை தேவன் படைத்து எல்லாம் நல்லது என்று தேவன் கண்டார் . எல்லாவற்றையும் தாம் படைத்த மனிதனுக்கு சாதகமாக உருவாக்கினார் . ஏவாள் சர்ப்பத்தின் மூலம் வஞ்சிக்கப்பட்டாள். பாவமானது உலகினுள் நுழைந்தது . அந்த பாவத்திலிருந்து நம்மை இயேசு கிறிஸ்து தம்முடைய மரணத்தின் மூலம் இரட்சித்தார் . பாவமற நம்மை கல்வாரி சிலுவையின் தாம் சிந்தின ரத்தத்தின் மூலம் மீட்டெடுத்து தம் பிள்ளைகளாக்கினார் . கிறிஸ்துவின் பிள்ளைகள் என்று சொல்கின்ற நாம் எப்படிப்பட்ட வேஷம் தரித்திருக்கிறோம்.
இந்த உலகத்திற்கு ஒத்த வேஷம் தரித்திருக்கிறோமா இல்லை தேவனுக்கொத்த வேஷம் தரித்திருக்கிறோமா? நம்முடைய வாழ்வு கிறிஸ்துவை பிரதிபலிக்கக்கூடியதாய் இருக்கிறதா? நாம் தேவனை ஆவியோடும் உண்மையோடும் தொழுது கொள்ளுகிறோம்? இல்லை பேர் கிறிஸ்தவர்களாக இருக்கிறோமா? மனிதன் பார்க்கும் போது மாய்மாலமான ஒரு ஜீவியம் செய்கிறோமா?
இந்த உலகத்தின் வளர்ச்சியும் அதனால் மனிதனுக்கு கிடைத்திருக்கிற வசதிகளும் நம்மை கிறிஸ்துவிற்கு நேராக வழிநடத்துகிறது? இல்லை உலகத்துக்கு நேராய் வழி நடத்துகிறதா? நாம் ஆவிக்குரிய பிரகாரம் ஜீவிக்க வேண்டும் என்று வேதம் வாசிக்கவும் , ஜெபிக்கவும் முற்படுவோம் ஆனால் பிசாசானவன் உலகத்தின் இச்சைகளுக்கு அடிமையாகி தேவனை விட்டு தூரம் போக நேரிடுகிறது . ஆனால் கிறிஸ்துவின் சாயலாக அவரில் நிலைத்திருந்தால் எந்த உலக ஆசைகளும் நம்மை கிறிஸ்துவின் அன்பை விட்டு நம்மைத் தூரத்திற்கு அழைத்துச் செல்லாது.
நம்முடைய சூழ்நிலைகள் எதுவாயினும் கிறிஸ்துவின் நாம மகிமைக்கு எந்த பங்கமும் வராமல் நடந்து கொள்ளுவோம். வேலை இடங்களில் கர்த்தருக்கு பிரியமில்லாத காரியங்களைச் செய்யாமல் இருப்போம். நம்முள் இருக்கும் பாவ மனிதன் உலகத்திற்கு இணங்கி நடக்க பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறான். ஆனால் பரிசுத்த ஆவியானவர் நம்முள் அசைவாடிக்கொண்டிருந்தால் நம்முடைய சிந்தனைகளும், எண்ணங்களும், செயல்களும் கர்த்தருடைய சித்தத்திற்கு உட்பட்டு வாழ்வோம். கர்த்தருடைய விருப்பம் நம் விருப்பங்களாகும். கர்த்தருடைய பரிபூரண சித்தத்தை நாம் நிறைவேற்றுகிறவர்களாயிருப்போம்.
தேவனுக்கு ஒத்த வேஷம் தரித்து வாழ்தல் என்பது ஒரு நாளில் நடந்து விடும் அதிசயம் இல்லை. தினம் தினம் நம் உள்ளான மனுஷன் புதுப்பிக்கப்பட்ட வேண்டும். அப்பொழுது நம் சொற்கள், செயல்கள், சிந்தனைகள், நடக்கைகள் ஒவ்வொன்றும் புதியதாய் மாறும். நம் கண்கள் எப்பொழுதும் யேசுவையே நோக்கிக் கொண்டு இருக்கட்டும். நேர்மையான மற்றும் நீதியான காரியங்களை மட்டும் நம் கண்கள் பார்க்கட்டும். அப்பொழுது நாம் இந்த உலகத்தின் ஆசா பாசங்களுக்கு நம் இதயத்தையும், மனதையும் அலைபாய விடமாட்டோம். எப்பொழுதும் கிறிஸ்துவிற்கு ஒத்த வேஷத்தைத் தரித்துக் கொள்ளலாம்.
பிதாவின் சித்தத்தை பரிபூரணமாய் நிறைவேற்றுவோம். உலக காரியங்களையும், கிறிஸ்துவுக்கு உகந்த காரியங்களையும் பகுத்தறியக் கற்றுக் கொண்டு கிறிஸ்துவின் சித்தத்தை நிறைவேற்றுவோம். கிறிஸ்துவில் மறுரூபமாக்கப்படுவோம். அவர் சாயலைப் பெற்றுக்கொள்வோம் .
1 யோவான் :2 :15 -17
உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூராதிருங்கள்; ஒருவன் உலகத்தில் அன்புகூர்ந்தால் அவனிடத்தில் பிதாவின் அன்பில்லை.
ஏனெனில், மாம்சத்தின் இச்சையும், கண்களின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையுமாகிய உலகத்திலுள்ளவைகளெல்லாம் பிதாவினாலுண்டானவைகளல்ல, அவைகள் உலகத்தினாலுண்டானவைகள்.
உலகமும் அதின் இச்சையும் ஒழிந்துபோம்; தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
ரோமர் :13 :14
துர்இச்சைகளுக்கு இடமாக உடலைப் பேணாமலிருந்து, கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவைத் தரித்துக்கொள்ளுங்கள்.
ஜெபம்:
அன்புள்ள பிதாவே, உலக காரியங்களின் மேல் கவனம் வைத்து உலகத்திற்கு ஒத்த வேஷம் திரியாமல் உமக்கு பிரியமான வேஷத்தைத் தரித்துக் கொள்ள உதவி செய்யும். உம்முடைய சாயல் என்னுள் பிரதிபலிக்கட்டும். உம்முடைய சித்தைத்தை தினம் தினம் நிறைவேற்றி வாழ அருள் புரியும். பிறர் நலம் பேணி வாழ உதவும். உம்முடைய பரிபூரண சித்தத்திற்கு என்னை ஒப்புக்கொடுக்கிறேன். உமக்கு உகந்த பாத்திரமாக என்னை வனைந்து மறுரூபமாக்கும். இயேசுவின் நாமத்தில் ஆமென்.
No comments:
Post a Comment